search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி ஆசிரியை கொலை"

    • நடத்தை சந்தேகத்தால் பள்ளி ஆசிரியையை கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சர்மிளாவின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள சம்பாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 43), டிராக்டர் டிரைவர். இவருடைய மனைவி சர்மிளா. தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு பாவனா என்ற மகளும், நிஷாந்த் என்ற மகனும் உள்ளனர்.

    ராஜாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்த நிலையில், மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கம் போல நேற்றிரவும் ராஜா மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் தூங்க சென்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி சர்மிளாவை கத்தியால் தலை, கழுத்து பகுதிகளில் ராஜா சரமாரியாக வெட்டினார். இதனால் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் சர்மிளா உயிருக்கு போராடிய நிலையில், ராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சற்று நேரத்தில் சர்மிளா துடிதுடித்து இறந்து போனார்.

    இந்நிலையில் சர்மிளா ரத்த வெள்ளத்தில் கட்டிலிலேயே இறந்து கிடந்த காட்சியை பார்த்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறித் துடித்தனர். அவர்கள் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்கள் மனதை உருக்குவதாக இருந்தது. மேலும் இதுகுறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சர்மிளாவின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜா கொலைக்கு பயன்படுத்திய கத்தியை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்த விசாரணை நடத்தினர். இதற்கு இடையே ராஜா நாமக்கல் நகர போலீசில் சரணடைந்தார்.

    போலீசார் விசாரணையில், ராஜா குடிபோதையில் சர்மிளா மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுவதும், அவர்கள் இடையே நேற்று தகராறு ஏற்பட்டபோது ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடத்தை சந்தேகத்தால் பள்ளி ஆசிரியையை கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×